Posts

Showing posts from December, 2023

காதல் : ஒரு தசாப்த தவம்

Image
தாலி கட்டும்போது நான் உளம்குழைந்து அழுதபடி வர்ஷினிக்கு நெற்றிமுத்தமிட்ட காட்சியை அவளுக்கு ஒப்பனையிட வந்த தோழி இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது பல லட்சம் பார்வையாளர்களை எட்டியது. யாரென்றே தெரியாத பல்லாயிரம் பேர் "நாங்களும் அழுதிட்டோம்... நீங்க நல்லாயிருக்கணும்..." என வியந்து கருத்திட்டிருந்தனர். உள்ளபடியே எனக்கு இது திகைப்பளித்தது. எளிய, ஆடம்பர வாழ்க்கை கொண்டவர்கள் உட்பட யாவருக்கும் தாலி கட்டும் தருணம் என்பது எப்படியும் சில நொடியேனும் உணர்ச்சிவயத்திற்குரிய ஒன்று தான். நானே நேரில் என் நண்பர்கள் சிலர் அப்படி கண் கலங்கியதை பார்த்திருக்கிறேன். எனில், எங்கள் வீடியோ ஏன் இவ்வளவு பரவி பாதித்தது? எங்களுடைய திருமண புகைப்படக்கலை நண்பர் சொன்னார், "கண்ணீரல்ல காரணம். '10 ஆண்டு காதல்' என்ற தலைப்பு தான். இன்றுள்ள காதலர்கள் பெரும்பாலோனோருக்கு இவ்வளவு காலம் காதலில் தொடர முடிவதில்லை” என. காதலில் தொடர்ச்சி என்பது உண்மையில் இவ்வளவு மதிப்புமிக்க ஒரு செயலா? நம் சமூகத்தின் பொதுப்பண்புகளால் அளவிடுகையில் காதல் இன்று அகமும் புறமும் பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. ஆழ்மனதில் தொன்மம் போல நீட...

காதல் The core - உடனிருத்தல் எனும் பெருவழிப்பாதை!

Image
"இதயத்தில் அல்ல, மேல் உதட்டில் இருந்து வரும் காய்ந்த முத்தங்களை வைத்து தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுடன் 50 வருடம் தாம்பத்யம் நடத்தி விட முடியும்" என ஜி.நாகராஜன் சொன்னது ஆண் பெண் திருமண உறவு குறித்து சராசரி சமூகத்தின் நினைவுகளாக மாறிவிட்ட புறவியல் எச்சத்தின் வெளிப்பாடு. "20 வருடம் வாழ்ந்து விட்ட பிறகு எதற்கு விவாகரத்து?" என மேத்யூவின் மனைவி ஓமனாவின் முன்பு வைக்கப்பட்ட கேள்வியும் அதற்கான விடைகளும், விடை வழியாக குடும்பத்திலும், சமூகத்திலும் நிகழும் ஏற்பின் நுண்மையான ஆக்கமே "காதல் - The core" திரைப்படம். The Great Indian kitchen படத்தை இயக்கிய ஜியோ பேபியின் மற்றுமொரு ஆழமான படைப்பு இது. மேத்யூவாக மம்மூட்டி, ஓமனாவாக ஜோதிகா. இருவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குரிய இயல்பான இடைவெளிகள் போல சாதாரணமானது அல்ல இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி. சமையலறை முதல் படுக்கையறை வரை படம் முழுக்க இருவருக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச்சுவர் ஒன்று இருக்கிறது. அது இருவரும் உடைக்க இயலாத, உடைக்க விரும்பாத ஒன்றாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதே போன்றதொரு சுவரே ...

யோகம் : சங்கல்பத்தின் பெரு நதி

Image
'யோகம் ஒன்றே நம்மை மீட்கும் வழி' என முதல்கட்ட வகுப்பில் குரு சௌந்தர் சொன்னார். 'எங்கிருந்து எங்கு மீள்வதற்கு?' என்ற கேள்வி எழுவதற்கும், அதற்கான பதிலை அறிவதற்குமுண்டான தகுதியை தான், அடிப்படை பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் வழியாகவே பெற்றிருக்கிறேன் என்பதை இரண்டாம் கட்ட வகுப்பில் அறிந்தேன். கடந்த நான்கு மாதங்களில் 60 நாட்கள் பயிற்சிகளோடு கொண்டிருந்த தொடர்பின் மூலம் என் அன்றாட உடல் உபாதைகளாக இருந்த சைனஸ், தலைவலி, செரிமான கோளாறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறேன். இடையிடையே அலுவல் பணி, பயணம், மருத்துவ ரீதியான நாட்களில் பயிற்சி செய்ய முடியாமல் போயிருக்கிறது. அதற்காக, இயல்பாக எழ வேண்டிய குற்றவுணர்வோ, வருத்தமோ எனக்கு ஏற்படவில்லை. காரணம், இவையெல்லாம் ஏற்பட கூடாதென்று துவக்கத்திலேயே குரு அறிவுறுத்தியிருந்தார். குற்றவுணர்வு எங்கும் சிறு அளவேனும் இடைவெளியை உருவாக்கும். அவரவர் மனநிலையை பொறுத்து அந்த இடைவெளி வளரவும் கூடும். யோகம் என்னை நலமாக, ஆரோக்கியமாக, சமநிலையுடன் வைத்திருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது மட்டுமே யோகத்துடன் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரப்புள்ளி. பிற பயிற்சிகள...

யோகம்: நல்லூழ் விளைவு

Image
'மலைத் தங்குமிடத்தில் யோக பயிற்சி முகாம்' என நீங்கள் அறிவித்தவுடன் வலசை பறவை போல, என் அலுவல் மற்றும் தனி வாழ்வு அளித்திருந்த அழுத்தங்களில் இருந்து ஒரு சிறு விடுதலையை எதிர்பார்த்தே அதில் பங்கேற்க ஆர்வம் கொண்டேன். ஆனால், ஈரோடு விஷ்ணுபுரம் அறையில் தங்கியதும், வெள்ளியன்று அதிகாலையில் எழுந்து அங்கிருந்த உங்கள் 'தன்னைக் கடத்தல்' நூலை வாசிக்க நேர்ந்ததும் எனக்கு அந்த துவக்கத்திற்கான பிறிதொன்றிலா ஆசீர்வாத உணர்வை அளித்தது. என் சைனஸ் உபாதைக்காக ஏற்கனவே மூச்சு சார்ந்து ஓரிரு பயிற்சிகளை சித்த வைத்தியர் பரிந்துரையின் பேரில் வேதாத்ரி மகரிஷி அமைப்பினரிடம் கற்றிருந்ததும், ஜக்கி நடத்திய இரண்டு நாள் முகாமின் மூலம் சாம்பவி பயிற்சி பழகியதும் பாரம்பரியமற்றவை (Non traditional) என்ற புரிதலே குரு சௌந்தரின் மூலம் தான் அறிந்தேன். அந்த பயிற்சிகளை அவர் சற்றும் கீழிறக்காமல் முறையாக இப்படி வகைப்படுத்திய விதம், பழைய அரைகுறை பயிற்சியின் நினைவுகளை மொத்தமாக கழற்றி வைக்க உந்தியது. அதுவே நிலையான கற்றலுக்கான வழி என உள்ளுணர்வு முன்னடத்திற்று. உடல் - மூச்சு - மனம் சார்ந்த அழுத்தங்களை Muscular tension, Mental ...

சித்திரைத் திருவிழா - அறிந்த கதையும், அறியாத உண்மைகளும்!

Image
தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம் - மதுரை. இலக்கியங்களில் நெடுங்காலமாக பேசப்படுகின்ற ஊர் என்பதாலும், இங்கு அரசாளும் மீனாட்சி தாய்வழிச்சமூகத்தின் எச்சப்பாடாக இருப்பதாலும் மதுரைக்கு அப்படியொரு சிறப்பு. மேலும், ஒரு பெண்தெய்வம் தனியாக முடிசூடி திக்விஜயம் செய்யும் வழக்கம் வேறெந்த ஊரிலும் இல்லை. அதேபோல, அவளுடைய பெயரை சாதி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் சூட்டிக்கொள்கிறார்கள். இந்தச் சிறப்பும் வேறெந்த தெய்வத்திற்கும் கிடையாது. எனவே, பெண்ணின் தனித்த உரிமையை பேணி காக்கும் சடங்குகளும், திருவிழாக்களும் உணர்வு மாறாமல் தகித்துக் கொண்டிருப்பதால் பண்பாட்டின் விழுமியங்களில் மதுரைக்கு எப்போதும் தனிப்பெருமை உண்டு என்கிறார் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன். மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு - "திருவிழாக்களின் திருவிழா" என்றதொரு மங்காத புகழ்மொழியுண்டு. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் (பெரும்பாலும் தென்மாவட்டங்களில் இருந்து) சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரைக்கு வந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதை வெறும் சைவ - வைணவ சமயங்களின் விழாவாக சுர...