Posts

மகளுலகு

Image
மகள் வைகாவின் முதல் பிறந்தநாள் அவளுக்குப் பிடித்த காடும், ஆறும், மலையும், பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் என பொலிந்து நிறைந்தது. இன்று அற்ப ஆணவ சுகத்துக்காக முழுக்க ஆடம்பர போட்டிகளாக மாறி விட்ட திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களின் நோயிலிருந்து மகளையாவது சற்று தள்ளி அழைத்து வந்துவிட வேண்டும் என நினைத்தே அவள் பிறந்தநாளுக்கு வீட்டை விட்டு கிளம்பிச் சென்றோம். மகள் பிறந்ததிலிருந்து குடும்பத்தின் உள்ளேயும் வெளியேயும் கடமையென எங்களைச் சுற்றிச்சுழல்வது அவளுக்கான பொருளாதார சேமிப்புகளும், வளர்ப்பு முறைகளும் தான். அடிப்படையில் இக்கால சேமிப்பு நடைமுறைகள் எல்லாம், உலகமய நுகர்வு வெறியிலிருந்து எவ்வளவு தூரம் நம்மால் விலகி வாழ முடிகிறது என்பதைப் பொறுத்தது. ஒரு குடும்பமாக இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம் கைகளுக்கு அப்பாற்பட்டது. இயன்றவரை எளிமையாய் இருக்க முயற்சிப்பது மட்டுமே நம்மால் ஆவது. ஆனால், குழந்தை வளர்ப்பு முறையில் எளிதாக கைக்கொள்ள முடிகிற ஒரு வழி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவளை அவதானித்ததன் மூலமாகவும், அவள் சார்ந்து தேடிக் கற்றவையிலிருந்தும் மிக சீக்கிரமே கண்டுகொண்ட ஒரு...

மாரீசன் - அமைதியும், அலைக்கழிப்பும்

Image
மாரீசன் படத்தில் நான் வியக்கும் முதல் அம்சமே வடிவேலு என்னும் நடிகனுக்குள் இருக்கும் கலைஞனின் முதிர்வு தான். உண்மையில் அது மிகப் பூடகமானது. கூர்மையான அவதானிப்பின் மூலமே அறிய முடிவது. அவரிடம் வெளிப்படும் இந்த புதிய பரிமாணத்திற்காகவே, நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு தமிழ்ப்படத்தை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.  வடிவேலு அடிப்படையில் தெக்கத்தி பகடியுணர்வின் முகம். அவ்வகையில், காமெடியனாக மட்டும் நமக்குள் பதிந்திருந்த அவருடைய பாவனைகளில் பெரும்பாலும் நாடக அம்சங்களையே பார்க்க முடியும். ஆனால், இந்தப் படத்திலிருக்கும் வடிவேலு முற்றிலும் வேறானவர். வெறும் உடல் வயதினால் ஏற்பட்ட முதிர்வு மட்டுமல்ல இது. அகவயமாகவே இதுவரை நாம் பார்த்திராத உயரத்திற்கு வந்திருக்கிறார். தமிழ்த்திரையில் சிவாஜி, கமல், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்று அரிதான சில நடிகர்களிடம் மட்டுமே நான் உணரக்கூடிய ஒரு படிநிலையை வடிவேலுவிடமும் இப்போது காண்கிறேன்.  இம்சை அரசன் படத்தில் உக்கிரபுத்தனாக அவர் அப்போதே இந்த புள்ளியை நோக்கி நகர்ந்திருக்கிறார். ஆனால், நாம் தான் அவரை சரியாக பயன்படுத்தவில்லையோ என நினைக்கிறேன். மாமன்னன் ...

கனவின் நிலம் சோழம்!

Image
என் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறியது. சோழர் கால ஆலயக்கலை மரபின் 170 ஆண்டுகால குறுக்குவெட்டு தோற்றத்தை ஒரே நாளில் கண்டேன். கி.பி. 1000ல் துவங்கி 1173 வரையில் பெரும் கலைக் கொடையென சோழப் பேரரசர்கள் நிர்மாணித்த தஞ்சைப் பெருவுடையார், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்களை தொடர்ச்சியாக பார்த்தறிந்தது என் முழு வாழ்வுக்குமான களிப்பின் பெருக்கு. 2017ல் பணியிடத்தில் எனக்கேற்பட்ட பெரும் அகச்சோர்விலிருந்து மீளும் பொருட்டு வெறிகொண்டு நான் வாசித்த நூல்களில் ஒன்று உடையார். 6 பாகங்களையும் கணினித்திரையிலேயே படித்து முடித்திருந்தேன். என் 22 வயதில் நான் வாசித்திருந்த முதல் பெரிய நூல் அது. பொன்னியின் செல்வனும், உடையாரும் சோழத்துடன் உணர வைக்கும் 'ஜென்மாந்திர பந்தம்' எனக்கு அன்று துவங்கியது. அதற்கு முன், 10 வயதில் பள்ளிச்சுற்றுலாவின் போது முதன்முறை சென்றிருந்த தஞ்சை வெறும் தலையாட்டி பொம்மையின் நினைவாக எஞ்சியிருந்தது. உடையாருக்கு பின் தான் அவ்விதை முளைத்தெழுந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக அது பெரும் பித்தென எனை ஆட்கொள்ளத் துவங்கியது. சோழம் ஒரு சுழலென சூழ்ந்திழுத்து, பெருவுடையார் குறித்த...

அம்மா!

Image
இறுதிவரை எங்கள் யாராலும் புரிந்து கொள்ளப்படவே முடியாத ஒரு மனுஷி. அவ்வளவு எளிதில் யாரும் தன் அகத்தை அறிந்து கொண்டு விடக்கூடாது என மெனக்கெட்டு தன்னை அப்படி வெளிப்படுத்திக் கொண்டாளோ என்று கூட எனக்கு தோன்றுவதுண்டு. அவளுடைய இறுதிக்காலங்கள் முழுவதும் என்னை அலைக்கழித்த ஒரு கேள்வி - எக்கணமும் சிரிப்பும் கொண்டாட்டமுமாகவே இருக்க விரும்பிய ஒருத்தி, கடைசியில் ஏன் அப்படி ஆனாள்? தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை ஏன் அனுமதித்தாள்? அந்த சுய அழிவை ஏன் விரும்பினாள்? அதை எளிமையாக தடுக்க அவ்வளவு சாத்தியம் இருந்தும் அதையெல்லாம் ஏன் இடக்கையால் தூக்கியெறிந்தாள்?  7 அண்ணன், தம்பிகளுடன் ஒரே இளவரசியாய் பிறந்தவள். அவள் காலத்து பெண் பிள்ளைகளுக்கு இருந்த சுமைகள் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் திரிந்தவள். குடும்பத்தின் பொருளாதார வறுமைகளெல்லாம் அம்மாவை அவ்வளவாக பாதித்திருக்கவில்லை. அம்மாச்சி பனியாரம் சுட்டு வைத்திருக்கும் காசுகளை திருடிச்சென்று சினிமா பார்ப்பதும், திருவிழாக்களுக்கு போவதும், ஊர் சுற்றுவதும் தான் வேலையே.  வாழ்நாள் முழுவதும் இந்த கொண்டாட்டங்களை நீட்டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கள்ளமில்லா கனவுகள் அம்மா...

பெருநிலைப் பயணம்

Image
ஒரு மலையுச்சியில் இருந்து இன்னொரு மலையுச்சியை காணும் பொன் கனவு ஒன்று வாய்க்கப்பெற்றேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு சிறு பயணம் கொங்கர் புளியங்குளம் மலைக்கு. மதுரையின் காலாதீத உலகாக அதன் திக்கெங்கும் பேருருக் கொண்டு நிற்கும் எண்பெருங்குன்றங்களில் ஒன்று இது. தமிழ்நாட்டில் சமண சமயம் நுழைந்து அது முதன்முதலில் நிலைபெற இயற்கையின் கருணைக் குடையாகியவை பாண்டியத் தலைநகரின் குன்றுகளே. அவற்றில், சமண மலை, அரிட்டாபட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம் மலைகளிலிருந்த சமணர் வாழ்விடங்களை இதுவரை காண்பதற்கான வழிகளை 'பசுமை நடை' அமைப்பு உருவாக்கித் தந்தது. இது எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் - நண்பர்களால் 15 ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்படுவது.  மதுரை சார்ந்த அடிப்படை வரலாற்றுணர்வை அடைவதற்கான எளிய வாசல். தனிப்பட்ட முறையில் பசுமை நடை எனக்கு ஒரு செயலூக்கி போன்றது. வீட்டிலிருந்து மாதம் ஒரு முறையேனும் வெளியே கிளம்பி செல்வதற்கான கூவல் அங்கிருந்து வருகிறது. எதிர்மறை சூழல் கொண்ட அன்றாடங்களுக்கு மாற்றாக முழுக்க நேர்மறையான சில மணி நேரங்களை தருகின்றது. குழந்தைகளுடன் உரையாடி அவர்களுலகில் நுழைவதற்கான சாத்தியமளிக்கிறது...