அம்மா!

இறுதிவரை எங்கள் யாராலும் புரிந்து கொள்ளப்படவே முடியாத ஒரு மனுஷி. அவ்வளவு எளிதில் யாரும் தன் அகத்தை அறிந்து கொண்டு விடக்கூடாது என மெனக்கெட்டு தன்னை அப்படி வெளிப்படுத்திக் கொண்டாளோ என்று கூட எனக்கு தோன்றுவதுண்டு. அவளுடைய இறுதிக்காலங்கள் முழுவதும் என்னை அலைக்கழித்த ஒரு கேள்வி - எக்கணமும் சிரிப்பும் கொண்டாட்டமுமாகவே இருக்க விரும்பிய ஒருத்தி, கடைசியில் ஏன் அப்படி ஆனாள்? தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை ஏன் அனுமதித்தாள்? அந்த சுய அழிவை ஏன் விரும்பினாள்? அதை எளிமையாக தடுக்க அவ்வளவு சாத்தியம் இருந்தும் அதையெல்லாம் ஏன் இடக்கையால் தூக்கியெறிந்தாள்? 7 அண்ணன், தம்பிகளுடன் ஒரே இளவரசியாய் பிறந்தவள். அவள் காலத்து பெண் பிள்ளைகளுக்கு இருந்த சுமைகள் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் திரிந்தவள். குடும்பத்தின் பொருளாதார வறுமைகளெல்லாம் அம்மாவை அவ்வளவாக பாதித்திருக்கவில்லை. அம்மாச்சி பனியாரம் சுட்டு வைத்திருக்கும் காசுகளை திருடிச்சென்று சினிமா பார்ப்பதும், திருவிழாக்களுக்கு போவதும், ஊர் சுற்றுவதும் தான் வேலையே. வாழ்நாள் முழுவதும் இந்த கொண்டாட்டங்களை நீட்டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கள்ளமில்லா கனவுகள் அம்மா...